சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ். ஆர். ரெட்டி பற்றிய பயோபிக் - இயக்குநர் தேவ் கட்டா அறிவிப்பு

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை பற்றிய படத்தை தேவ் கட்டா இயக்கவுள்ளார்.

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருக்கும் இடையேயான நட்பு, அரசியல் வாழ்க்கை பற்றிய வெப் சீரிஸ் ஒன்று தயாராகவுள்ளதாகவும், இதனை ராஜ் இயக்க, திருமால் ரெட்டி மற்றும் விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

ஆந்திரா அரசியலில் ஒய்.எஸ். ஆர். ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருமே முக்கியமான தலைவர்கள் என்பதால் பலரும் இதனைப் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிரத் தொடங்கினர். இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியைப் பகிர்ந்து க 'பிரஸ்தனம்' படத்தின் இயக்குநர் தேவ் கட்டா இந்த கதையை தான் ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதை தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி காப்பியடித்து விட்டதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தேவ் கட்டா மற்றும் விஷ்ணு இந்தூரி இருவருக்குமிடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரின் நட்பு மற்றும் அரசியல் மோதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘இந்திரப்ரஸ்தம்’ என்ற படத்தை தேவ் கட்டா இயக்கவுள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேவ் கட்டா வெளியிட்டுள்ளார். இப்படம் ஒய்.எஸ். ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை பற்றி பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

‘இந்திரப்ரஸ்தம்’ படத்தை வி.ஹர்ஷா மற்றும் சி.தேஜா இணைந்து தயாரிக்கவுள்ளனர். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றிய தகவல்களை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE