மருத்துவச் சிகிச்சைக்கு முன் 'சடக் 2' டப்பிங்: சஞ்சய் தத் முடிவு

மருத்துவச் சிகிச்சைக்காக ஓய்வு எடுக்கும் முன் 'சடக் 2' திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க நடிகர் சஞ்சய் தத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதியன்று சுவாசப் பிரச்சினை, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் தத், தன் உடல் நலனை கவனித்துக் கொள்ள நடிப்பிலிருந்து சில காலம் ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

அவரது குடும்பத்திலிருந்து எந்தத் தகவலும் மேற்கொண்டு வரவில்லையென்றாலும் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக திரைத்துறையைச் சேர்ந்த கோமல் நட்டா பகிர்ந்தார்.

இந்நிலையில் சஞ்சய் தத் சமீபத்தில் நடித்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் 'சடக் 2' படத்தில் சஞ்சய்யின் டப்பிங் வேலைகள் குறித்து தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

"அடுத்த வாரத்துக்குள் 'சடக் 2' திரைப்படத்தின் கடைசி கட்ட டப்பிங் வேலைகளை சஞ்சய் முடிப்பார். அதன் பின் மருத்துவ ஓய்வில் செல்லவுள்ளார். அவரது பிரச்சினை குறித்து வெளியே தெரிந்த பின் அவரை நலம் விசாரித்து அன்பைப் பொழியும் ரசிகர்களால் அவர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

இந்த ஆதரவு அவருக்கு ஊக்கம் அளிக்கிறது. அதையும் தாண்டி, ரசிகர்களுக்கு தன்னுடைய நடிப்பின் மூலம் சிறந்த முயற்சியைக் காட்ட வேண்டும் என்றும் அவர் நினைத்துள்ளார்" என்று சஞ்சய் தத்தின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இன்னொரு பக்கம் மகேஷ் பட் இயக்கி, அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் 'சடக் 2', வாரிசு அரசியலின் முகம். அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் குரல்கள் வலுத்துள்ளன. இதுவரை யூடியூபில் அதிகம் டிஸ்லைக் பெற்றுள்ள ட்ரெய்லர் என்ற சாதனையை 'சடக் 2' படைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி 'சடக் 2', டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

"'சடக்' படத்துக்கு சஞ்சய்யின் மனதில் விசேஷமான இடம் இருப்பதால், 'சடக் 2' படத்தைச் சுற்றியிருக்கும் வெறுப்பால் சஞ்சய் தத் வருத்தத்தில் உள்ளார். அது படம் மட்டுமல்ல, அவரது மனப்பூர்வமான உணர்ச்சி. இந்த நையாண்டி, வெறுப்பைத் தாண்டி படத்தை அதன் கதைக்காக, நடிகர்களின் நடிப்புக்காக மக்கள் பார்ப்பார்கள் என்று சஞ்சய் நம்புகிறார்" அவரது நெருங்கிய நண்பர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE