சமூக வலைதளத்தில் நிகழும் எதிர்மறை கருத்துகள் தொடர்பாக முன்னணி நடிகர்களுக்கு வனிதா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை வனிதா கடந்த ஜூன் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு எழுந்த சர்ச்சைகளுக்கு உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடிக் கொடுத்து வருகிறார்.
மேலும், அவ்வப்போது சமூக வலைதளங்களில் நிகழும் எதிர்மறை விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 14) காலை முதல் பாலா என்பவருடைய தற்கொலை பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» கரோனா தொற்று: பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்
» அடுத்த 5 ஆண்டுகளுக்கு இசையில் கூடுதல் கவனம்: ஹிப் ஹாப் ஆதி திட்டம்
"சமூக ஊடகம் எதிர்மறை விஷயங்களால் நிறைந்துள்ளது. உணர்ச்சி ரீதியில் மற்றவருக்கு ஆதரவு தர முடியவில்லை என்றால், கனிவாக இருக்க முடியவில்லையென்றால் இதைக் கண்ணியமான சமூகம் என்று அழைக்காதீர்கள். அஞ்சலி, மன்னிப்பு, நீதி வேண்டும் என்று எல்லாமே மகிழ்ச்சியில்லாத ஹாஷ்டேக் மட்டுமே.
நடிகர்களே தயவு செய்து அதிக நேர்மறை விஷயங்களை உங்கள் ட்விட்டர் கணக்குகளிலிருந்து பரப்புங்கள். உங்கள் ரசிகர்களுக்கு உத்வேகமூட்டும் செய்திகளைக் கொடுங்கள். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். இது போன்ற கடினமான காலகட்டத்தில் உங்கள் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவது போல பேசினால் அது அவர்களுக்கு அதிக ஊக்கத்தைத் தரும். சில விளம்பரங்கள் தாமதமாகலாம். ஆனால் மக்களின் உயிர் பிரச்சினையில் இருக்கிறது. அவர்களுக்கு நீங்கள் தேவை"
இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.