மெஷின் கன் காட்சியின் சுவாரசியப் பின்னணி: லோகேஷ் கனகராஜ் பகிர்வு

By செய்திப்பிரிவு

மெஷின் கன் காட்சியின் சுவாரசியப் பின்னணியைப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ். இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே, இந்தப் படம் டொரண்டோ திரைப்பட விழாவில் நேற்று (ஆகஸ்ட் 12) திரையிடப்பட்டது. இந்த விழாவுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில் 'கைதி' படத்தின் இறுதிக் காட்சியில் வரும் மெஷின் கன் காட்சி குறித்துப் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முதலில் கதை எழுதும்போது நகைச்சுவை கலந்து ஆக்‌ஷன் கதையாகத்தான் எழுதினேன். எனவே கைட்லின் கன்னைப் பயன்படுத்தும் காட்சியும் நகைச்சுவையாகவே எழுதப்பட்டிருந்தது. மெதுவாகக் கதை வளர்ந்தது. பெரிய நடிகர் நாயகனாக நடிக்கக் கிடைத்தார். அதனால் நான் முன்னர் எழுதிய சின்னச் சின்ன யோசனைகளைப் பெரிதாக்கினேன். அப்போது அந்த மெஷின் கன் காட்சியும் முக்கியமானதாக மாறியது.

நான் 'டெர்மினேட்டர்', 'ப்ரிடேட்டர்', 'கமாண்டோ' மாதிரியான 90-களில் வெளியான ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களின் பெரிய ரசிகன். அந்தப் படங்களில் பயன்படுத்தும் துப்பாக்கி ஒன்றை என் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். எனவே 'கைதி' கதை எழுதும்போது அந்த யோசனையைப் பயன்படுத்தினேன்.

ஆரம்பத்தில் எங்கள் தொழில்நுட்பக் குழுவினரிடமிருந்து கேள்விகள் வந்தன. அதை எப்படி நம்பும்படியாக காட்டுவது என்று யோசித்தோம். அதனால்தான் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று படித்துவிட்டு, உடன் ஒரு காவல்துறை அதிகாரியின் உதவியுடன் பயன்படுத்துவதாகக் காட்சிகள் வைத்தோம்.

விஷால் தியாகி என்பவர்தான் அந்தத் துப்பாக்கியை வடிவமைத்தார். இதற்காக அவர் வெளிநாட்டிலிருந்து வந்தார். அவரிடம் இதை நான் கிராஃபிக்ஸில் செய்ய விரும்பவில்லை என்றேன். எனக்குத் தத்ரூபமாக துப்பாக்கி, குண்டுகளோடு வேண்டும் என்றேன். அவர் இரண்டு மாதங்கள் உழைத்துப் படத்துக்காக அதை உருவாக்கினார். அந்தத் துப்பாக்கி, குண்டுகளை இயக்குவதற்கென்றே படப்பிடிப்பில் 11 பேர் கொண்ட குழு இருந்தது. படப்பிடிப்பில் சுவாரசியமாக இருந்தது".

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE