சஞ்சய் தத் பூரண நலம்பெற சிரஞ்சீவி வாழ்த்து

By செய்திப்பிரிவு

உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு, பூரண நலம்பெற சஞ்சய் தத்துக்கு சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு உடல்நிலை சீராகி ஆகஸ்ட் 10-ம் தேதி வீட்டிற்கு திரும்பினார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை சஞ்சய் தத் தனது மருத்துவ காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்குப் பின் சஞ்சய் தத்துக்கு 3-ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றும், விரைவில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் சஞ்சய் தத் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்புள்ள சஞ்சய் தத், உங்களுக்கு இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து அறிந்ததும் மிகுந்த வலி ஏற்பட்டது. ஆனால் நீங்கள் ஒரு போராளி, பல ஆண்டுகளாக பல்வேறு கஷ்டங்களை வீழ்த்தி வந்தீர்கள். இதையும் வெற்றி கொள்வீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் விரைவில் குணமடைய எங்கள் அன்பும் பிரார்த்தனைகளும்"

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE