நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை என்று ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சுதாகர், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கிழக்கே போகும் ரயில்'. இளையராஜா இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தின் மூலமாகவே ராதிகா திரையுலகிற்கு அறிமுகமானார்.
முன்னணி நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரையில் அறிமுகம், தொகுப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தன்னை நிரூபித்தவர் ராதிகா சரத்குமார். இன்றுடன் (ஆகஸ்ட் 10) அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 42 ஆண்டுகள் ஆகின்றன.
இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ராதிகாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். 42 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ராதிகா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளையும் சவாலாக எடுத்துக்கொண்டு, என் சிறந்த முயற்சியைத் தந்தேன். தொடர்ந்து என் வேலையை வளர்த்தேன். அதுதான் எனக்கு இந்தப் பயணத்தைத் தந்திருக்கிறது. பலருக்கு மகிழ்ச்சியை, நம்பிக்கையை, துணிச்சலைத் தந்திருக்கிறது. எனக்கு அன்பையும், வலிமையையும் தந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி".
இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.