இந்தியில் ரீமேக் ஆகும் மகேஷ் பாபுவின் தூக்குடு

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 'தூக்குடு' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

2011-ம் ஆண்டு ஸ்ரீனு வாய்ட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த கமர்ஷியல் திரைப்படம் 'தூக்குடு'. சமந்தா, பிரகாஷ் ராஜ், பிரம்மானந்தம் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அன்றைய நாளில் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த படம் 'தூக்குடு'.

சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு மகேஷ் பாபுவின் திரை வாழ்க்கையை மீட்ட திரைப்படமாக 'தூக்குடு' பார்க்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படங்களின் இயக்குநர் இந்த ரீமேக்கை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட நடிகர்களை 'தூக்குடு' ரீமேக்கில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ரீமேக்கில் முன்னணி பாலிவுட் நாயகன் நடிப்பார் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE