அரசியலுக்கு வராமல் நல்லது செய்வதும் சாத்தியமே: லாரன்ஸ்

By செய்திப்பிரிவு

அரசியலுக்கு வராமலும் நல்லது செய்வது சாத்தியம்தான். சேவையே கடவுள் என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து பெப்சி, நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடனக் கலைஞர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார் லாரன்ஸ்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறார். அவர் நடத்தி வரும் ஆசிரமத்தில் குழந்தைகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கும் படிப்புச் செலவு தொடங்கி அனைத்துச் செலவுகளையும் லாரன்ஸ்தான் செய்து வருகிறார்.

இன்று (ஆகஸ்ட் 9) தனது ட்விட்டர் பதிவில் 'அரசியல்' என்று தலைப்பிட்டு சிறு கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்றும், ஏழை மக்களுக்கு அது செய்வேன் இது செய்வேன் என்றும் சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூகத்துக்குச் செய்வதே சிறந்தது.

இதற்கு முன்னால் பதிவிட்ட வீடியோ என்னுடைய 12 ஆண்டுகால முயற்சி மற்றும் நம்பிக்கைக்குச் சான்று. அவர்களது கனவுகள் நனவானதை நீங்கள் காணலாம். இந்தக் குழந்தை உட்பட மற்ற 200 குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமலும் இவற்றைச் செய்வது சாத்தியம்தான். சேவையே கடவுள்".

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE