கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் வசந்த் சாதே மறைவுக்கு ப்ரித்விராஜ்அஞ்சலி

By செய்திப்பிரிவு

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் தீபக் வசந்த் சாதேவுக்கு நடிகர் ப்ரித்விராஜ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

துபாயிலிருந்து பயணிகளுடன் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் குமார் இருவரும் மரணமடைந்தனர்.

கோவிட் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களைத் தாயகத்துக்குக் கொண்டு வர ஆரம்பிக்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் துபாயிலிருக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியா அழைத்து வந்தது. இதே வந்தே பாரத் திட்டத்தின் மூலமாகத்தான் ஜோர்டனில் சிக்கியிருந்த நடிகர் ப்ரித்விராஜ் உள்ளிட்ட 'ஆடுஜீவிதம்' திரைப்படக் குழுவினரும் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

தீபக் வசந்த் சாதேவுக்கு நடிகர் ப்ரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சாதேவை தனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும், அவருடன் நிகழ்ந்த உரையாடலை என்றும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் ப்ரித்விராஜ் குறிப்பிட்டுள்ளார்.

டொவினோ தாமஸ், பாவனா, ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தீபக் வசந்த் சாதேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE