பார்த்திபனுக்கு நன்றி கூறிய சிம்பு

By செய்திப்பிரிவு

தன்னை மிகவும் புகழ்ந்து பேசியதற்காக, பார்த்திபனுக்கு பூங்கொத்து அனுப்பி நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்து, நிலைமை சீரானதும் தொடங்கும் எனத் தெரிகிறது.

மேலும், இதுவரை சிம்பு - பார்த்திபன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால், பார்த்திபன் அளித்த பேட்டியொன்றில் சிம்பு தொடர்பான கேள்விக்கு 'அவர் ஒரு சுயம்பு' என்று பாராட்டிப் பேசியுள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் சிம்பு.

உடனே, பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய இல்லத்துக்கு பூங்கொத்து, சாக்லெட்கள் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு. இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"'சுயம்பு’ சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!. “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் வொர்க் kபண்ணலேன்னு”. அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!"

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் ட்வீட்டின் மூலம், விரைவில் சிம்பு - பார்த்திபன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE