சமூக வலைதளங்களில் போலி ஃபாலோயர்கள் - பாடகர் பாத்ஷா மறுப்பு

By ஐஏஎன்எஸ்

இந்தி பாப் பாடகி பூமி திரிவேதி தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்று செயல்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு மும்பை போலீஸில் புகாரளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணையில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் மும்பை போலீஸாருக்கு தெரியவந்தன. போலி சமூக வலைதள கணக்குகள், போலி லைக்குகள், போலி ஃபாலோயர்கள் ஆகியவற்றுக்காக ஒரு பெரும் கும்பலே செயல்படுவது விசாரணையில் தெரியவந்தது.

பாலிவுட்டில் உள்ள பல முன்னணி பிரபலங்கள் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போலி ஃபாலோயர்களை பெற்றுள்ளதும் இவ்விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், நடன பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 18 முக்கிய பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்தனர்.

அந்த 18 பேரில் பிரபல இந்தி ராப் பாடகர் பாத்ஷாவும் ஒருவர். அவரிடம் நடத்திய விசாரணையில் சமூகவலைதளங்களில் போலி ஃபாலோயர்களுக்காகவும், யூ-டியூப் வியூஸ்க்காகவும் ரூ. 72 லட்சம் செலவு செய்ததை பாத்ஷா ஒப்புக் கொண்டதாக மும்பை போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கு பாத்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எனக்கு அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில் மும்பை போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். என் மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றசாட்டுகளையும் மறுத்து, இது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை என்பதை அவர்களிடம் தெளிவாக எடுத்துக் கூறினேன். 10 மணி நடந்த விசாரணையில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். அதிகாரிகளின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE