அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று கருணாஸின் மகன் கென் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு கருணாஸ் எம்எல்ஏவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது.
தற்போது 'அசுரன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கருணாஸின் மகன் கென் கருணாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் வணக்கம். என் அப்பாவுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் ஒரு அரசியல்வாதியாகவும், சமூக ஆர்வலராகவும் இருப்பதால் அவரது தொகுதி உள்ளிட்ட பல இடங்களுக்குக் கடந்த நாட்களில் சென்று வந்துள்ளார். இதனால் தொற்று ஏற்பட்டுள்ளது.
» இந்த ஆண்டு நமக்கு ஒரு எச்சரிக்கை மணி: நடிகை பூமி பெட்னேகர் கருத்து
» படப்பிடிப்பில் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் கலந்துகொள்ளத் தடையில்லை: மும்பை நீதிமன்றம் உத்தரவு
அவர் ஆரோக்கியம் தற்போது நிலையாக உள்ளது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். அப்பாவின் உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.
கடந்த சில நாட்களில் அப்பாவுடன் தொடர்பிலிருந்தவர்கள் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் தயவுசெய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கனிவான வேண்டுகோள்.
அவசரத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். ஏனென்றால் (உங்களுக்குத் தொற்று ஏற்படும்போது அது) உங்கள் குடும்ப உறுப்பினர்களை மன ரீதியாகவும், உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்".
இவ்வாறு கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.