இந்த ஆண்டு நமக்கு ஒரு எச்சரிக்கை மணி: நடிகை பூமி பெட்னேகர் கருத்து

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பருவநிலை காரணமாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது. அது இயல்பான நிலைக்கு தெற்கே உள்ளது. அது மேற்குப் பகுதியிலிருந்து இன்று முதல் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையின் அடிவாரத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குஜராத் மாநிலம், கொங்கன் & கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு நமக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''கடந்த இரண்டு நாட்களாகப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பேய் மழையை மும்பை பார்த்து வருகிறது. அதிலும் சில பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பற்றிய வீடியோக்களும் கட்டுரைகளும் பீதியை ஏற்படுத்துகின்றன. இந்த வருடம் நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி.

கான்க்ரீட் காடுகளும், வேகம் நிறைந்த நகரமயமாக்கலும் இதற்கான பதிலல்ல. தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் வெள்ளம் ஏற்படும். எங்கு பார்த்தாலும் கான்க்ரீட் மயம். பெரும்பாலான நகரங்களில் இதுதான் நிலை. ஒன்று தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது அல்லது வெள்ளம் ஏற்படுகிறது. அதிக காற்று மாசு, ஊட்டச்சத்துக் குறைபாடு என அடுக்கிக்கொண்டே போகலாம். வளர்ச்சி முக்கியம்தான். ஆனால், அதுவும் சீராக இருக்கவேண்டும். சிறிய மாற்றங்கள் கூட பெரிய விளைவை ஏற்படுத்திவிடும்''.

இவ்வாறு பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE