ஆயுஷ்மான் குரானாவுக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'ராக் ஆன்', 'கை போ சே' உள்ளிட்ட பிரபலமான இந்திப் படங்களை இயக்கியவர் அபிஷேக் கபூர். இறுதியாக சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலி கான் நடிப்பில் வெளியான 'கேதார்நாத்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது தனது அடுத்த படத்துக்குத் தயாராகியுள்ளார் அபிஷேக் கபூர். இதில் நாயகனாக ஆயுஷ்மான் குரானா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வேறொரு நாட்டில் பிறந்துவிட்டு, இன்னொரு நாட்டுக்காக விளையாடும் வீரராக ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளார். முழுக்கக் காதல் கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆயுஷ்மான் குரானா - வாணி கபூர் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் வட இந்தியாவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

தற்போது அக்‌ஷய் குமார் நடித்து வரும் 'பெல் பாட்டம்' படத்தில் வாணி கபூர் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE