பண மோசடி குறித்து ரியா சக்ரபர்த்தியிடம் அமலாக்கப் பிரிவு தீவிர விசாரணை

By ஐஏஎன்எஸ்

அமலாக்கப் பிரிவின் முன்பு இன்று ஆஜரான நடிகை ரியா சக்ரபர்த்தியிடம் பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது. முன்னதாக இந்த விசாரணையை ஒத்திவைக்க ரியா முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தனது சகோதரர் ஷௌவிக் சக்ரபர்த்தியுடன் மதியம் 11.50 மணியளவில் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு வந்தார் ரியா. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ரியாவின் பணப் பரிவர்த்தனைகள், முதலீடுகள், சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து கடந்த ஒரு ஆண்டில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து ரியாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன என்று தெரிகிறது. ரியா இயக்குநராகச் செயல்படும் விவிட்ரேஜ் ரியாலிட்டி எக்ஸ், அவரது சகோதரர் இயக்குநராக இருக்கும் ஃப்ரண்ட் இண்டியா ஃபார் வேர்ல்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்தின் கணக்கிலிருந்து சந்தேகப்படும்படியான பரிவர்த்தனைகள் நடந்தது குறித்து ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அமலாக்கப் பிரிவு, ஜூலை 31 அன்று பண மோசடி வழக்குப் பதிவு செய்தது.

முன்னதாக ஜூலை 25 அன்று, ரியா, இந்திரஜித், சந்தியா, ஷௌவிக் உள்ளிட்ட சக்ரபர்த்தி குடும்பத்தினர் மற்றும் சாமுயல் மிரண்டா, ஷ்ருதி மோடி உள்ளிட்டோர் மீது, தற்கொலைக்குத் தூண்டுதல், மோசடி, சுஷாந்தைப் பிடித்து வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சுஷாந்தின் தந்தை கே கே சிங், பாட்னாவில் வழக்குப் பதிவு செய்திருந்தார்.

பிஹார் காவல்துறையின் முதல் தகவலறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, அமலாக்கப் பிரிவு, ரியாவையும் அவரது குடும்பத்தினரையும் இந்த வழக்கில் விசாரித்து வருகிறது. ஷௌவிக் சக்ரபர்த்தியிடமும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE