'பார்ட்டி' வெளியாகாமல் சிக்கலில் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம்: வெங்கட் பிரபு

By செய்திப்பிரிவு

'பார்ட்டி' படத்தை வெளியிட முடியாமல், சிக்கலில் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ஜெய், ஷாம், சந்திரன், சத்யராஜ், ஜெயராம், சிவா, நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பை பிஜி தீவிலேயே முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.

இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ஆனால், படம் இன்னும் வெளியாகவில்லை. பிஜி தீவிலிருந்து படக்குழுவினருக்கு வரவேண்டிய கடிதம் இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றிவிட்டது.

இதனிடையே, வெங்கட் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'லாக்கப்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி ஜீ5-ல் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 'பார்ட்டி' படம் தொடர்பான கேள்விக்கு வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது:

" 'பார்ட்டி' படத்தை வெளியிட முடியாமல் சிக்கலில் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம். படப்பிடிப்பு தோதாக இல்லாத ஒரு இடத்தில் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்தோம். ஆனால், இன்னும் தணிக்கையைக் கூட படம் தாண்டவில்லை. படத்தின் பட்ஜெட் காரணமாக டிஜிட்டலில் வெளியிடுவது சாத்தியமில்லை. ஆனால், பிரச்சினைகள் தீரும் என்று நம்புகிறேன்".

இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE