போஜ்புரி நடிகை தற்கொலை: பணப் பிரச்சினை காரணமா?

By செய்திப்பிரிவு

போஜ்புரி நடிகை அனுபமா பதக், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆகஸ்ட் 2-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

40 வயதான போஜ்புரி நடிகை அனுபமா பதக், சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். அவர் சிலருக்குப் பணம் தந்திருந்ததாகவும், அது திருப்பித் தரப்படவில்லை என்ற காரணத்தால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தான் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்பு, ஃபேஸ்புக்கில் நேரலையில் பேசியுள்ளார் அனுபமா. அப்போது "நீங்கள் சில பிரச்சினைகளில் இருக்கிறீர்கள். தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என்று யாரிடமாவது சொன்னால், அது உங்கள் நல்ல நண்பராக இருந்தாலும் சரி, அவர் உங்களிடமிருந்து விலகி இருக்கவே பார்ப்பார். ஏனென்றால் நீங்கள் இறந்த பிறகு அவர்களுக்குப் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக.

மேலும் மற்றவர்கள் முன் உங்களை அவமானப்படுத்துவார்கள். எனவே, என்றும் உங்கள் பிரச்சினைகளை யாரிடமும் பகிராதீர்கள், யாரையும் நண்பராக நினைக்காதீர்கள். எல்லோரும் நம்பும் ஒரு நபராக இருங்கள். ஆனால், யாரையும் நம்பாதீர்கள். இதை நான் என் வாழ்க்கையில் கற்றுக் கொண்டிருக்கிறேன். மக்கள் மிக சுயநலமானவர்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்" என்று பேசியுள்ளார்.

அனுபமா விட்டுச் சென்றுள்ள கடிதத்தில், தனது இந்த முடிவுக்குப் பணப் பிரச்சினைகள் ஒரு முக்கியக் காரணம் என்றும், மனிஷ் ஜா என்பவர் மே மாதம் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும், திருப்பித் தர மறுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனுபமாவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு இரவு 12 மணிக்குப் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், "Bye bye and Good night" என்று அனுபமா குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE