'பொன்னியின் செல்வன்' படத்தில் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது.
இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்பு அனுமதி அளிக்கப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளனர். முதலில் சென்னையிலேயே அரங்குகள் அமைத்து முக்கியமான காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, இந்தப் படத்தில் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கதையில் வரும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்கான சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்க சாராவைத் தேர்வு செய்துள்ளார் மணிரத்னம்.