இந்தி சின்னத்திரை நடிகர் மரணம்: தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை

இந்தி சின்னத்திரை நடிகர் சமீர் சர்மா உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 44.

பாலாஜி டெலிஃப்லிம்ஸ் தயாரிப்பில் பிரபலமான சில தொடர்களில் நடித்திருந்தவர் சமீர் சர்மா. 2009ஆம் ஆண்டு, ஹஸீ தோ ஃபஸீ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மும்பையில் வாடகைக்குத் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் சமீர். இவரது உடல் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த குடியிருப்பின் பாதுகாவலர் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்கள் காவல்துறையை அழைத்துத் தகவலைச் சொல்லி, காவல்துறையினர் வந்து சமீரின் உடலை மீட்டுள்ளனர்.

"சமீர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று உத்தேசிக்கும் எந்த ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. தற்கொலை பற்றிய குறிப்புகளும் இதுவரை கிடைக்கவில்லை. இன்னும் நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

சின்னத்திரையோடு சேர்த்து 2009ஆம் ஆண்டு ஹஸீ தோ ஃபஸீ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கும் சமீர் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் மரணம் குறித்த ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். மேலும் மன நல ஆரோக்கியம் குறித்து ஒரு பதிவைப் பகிர்ந்திருந்த சமீர், 'நீங்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்றால் இதைப் படியுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே சமீரும் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீர் சர்மாவின் மரணத்துக்கு அவரது நண்பர்கள், சக நடிகர்கள், கலைஞர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE