சம்பளத்தின் ஒருபகுதியை தினக்கூலி பணியாளர்களுக்கு உதவ ஒதுக்கும் ரோஹித் ஷெட்டி

By செய்திப்பிரிவு

பாலிவுட்டைச் சேர்ந்த தினக் கூலி பணியாளர்களுக்கு நிதியுதவி செய்ய இயக்குநர் ரோஹித் ஷெட்டி முன்வந்துள்ளார்.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதைச் சார்ந்து இருந்த தினக்கூலி பணியாளர்கள் பலர் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு பிரபலங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் உதவி செய்துள்ளனர். தற்போது இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் இதற்காக முன்வந்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ரோஹித் ஷெட்டி, 'கத்ரோன் கே கிலாடி' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கு வருகிறார்.

இதன் விசேஷ பகுதிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தனக்குக் கிடைத்திருக்கும் வருவாயில் ஒரு பகுதியை, துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், சண்டைக் கலைஞர்கள், லைட்மேன் உள்ளிட்ட பலருக்கு, நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்குக்கே அனுப்பவுள்ளார்.

முன்னணி இயக்குநர்கள் என்பதால், இந்த நிகழ்ச்சிக்குப் பெரிய சம்பளம் பேசப்பட்டு இருக்கும். அதில் ஒரு பகுதி என்பதால் பெரிய தொகையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரோஹித் ஷெட்டியின் இந்த உதவிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரோஹிஷ் ஷெட்டியின் இயக்கத்தில் அடுத்ததாக 'சூர்யவன்ஷி' திரைப்பட வெளியாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கத்ரீனா கைஃப், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE