கரோனா அச்சுறுத்தல்: ராணா - மிஹீகா பஜாஜ் திருமணத்தில் கடும் கட்டுப்பாடுகள்

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலால், ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராணா தன் காதலி மிஹீகா பஜாஜைக் கரம் பிடிக்க உள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற உள்ளது. மே 21-ம் தேதி இரண்டு குடும்பங்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 8-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஹைதராபாத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது திருமண இடத்தை மாற்றிவிட்டார்கள்.

ராமநாயுடு ஸ்டுடியோவில் வெறும் 30 பேருடன் மட்டுமே ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் நடைபெறவுள்ளது. முதலில் தெலுங்குத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளை அழைக்கத் திட்டமிட்டு இருந்தார்கள். தற்போது கரோனா அச்சுறுத்தலால் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. குடும்பத்தினர் மற்றும் மிக முக்கியமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பே திருமணம் நடைபெறும் இடத்துக்கு அனைவரும் அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும், திருமணம் நடைபெறும் இடத்தில் பல்வேறு இடங்களில் சானிடைசர்கள் வைக்கப்படும் என்றும், சமூக இடைவெளியுடனே அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE