அஜித் - விஜய் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மங்காத்தா'. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையேதான் அஜித் - விஜய் சந்திப்பு நடைபெற்றது. 'மங்காத்தா' மற்றும் 'வேலாயுதம்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு அருகருகே நடைபெற்றதால் இது சாத்தியமானது.
அஜித் - விஜய் இருவருக்கும் நடுவே வெங்கட் பிரபு நிற்பது போன்ற புகைப்படம், சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம். அதற்குப் பிறகு வெங்கட் பிரபு எப்போது பேட்டியளித்தாலும், 'மங்காத்தா 2', விஜய்யை எப்போது இயக்குவீர்கள் போன்ற கேள்விகள் இடம்பெறுவது வழக்கம்.
தற்போது சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள 'லாக்கப்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் "அஜித் - விஜய் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா" என்ற கேள்விக்கு வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது:
"கரோனாவுக்குப் பிறகு மக்களுக்கான சிறந்த விஷயமாக இது இருக்கும். ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை உடனடியாக திரும்பக் கொண்டுவரும் விஷயமாகவும் இருக்கும். அவர்கள் இருவரையும் திரையில் ஒன்று சேர்க்கப் போவது நானா அல்லது வேறு யாராவதா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னிடம் சில யோசனைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
'வேலாயுதம்' - 'மங்காத்தா' படப்பிடிப்பின்போது அவர்களிடம் நான் இந்த யோசனையைச் சொன்னபோது, ‘சரி... பண்ணலாமே’ என்று கூறினார்கள்.
ஆனால், அது நடைமுறையில் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அது நடக்கும்போதுதான் நமக்குத் தெரியும். அனைவரும் ரஜினி - கமல் இணைவு குறித்துப் பேசுகிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒன்று நடந்தால், தல - தளபதி இணைவதும் நடக்கும் என்று நினைக்கிறேன்".
இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.