சுஷாந்த் ரசிகர்களுக்கு உண்மை தெரிய வேண்டும் - அனுபம் கேர் வேண்டுகோள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சுஷாந்தின் தந்தை, நடிகை கங்கணா, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, சுஷாந்தின் காதலி என்று அறியப்படும் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர், சுஷாந்த் மரண விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது:

சுஷாந்த் குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் உண்மை தெரிய வேண்டும். நிறைய விஷயங்கள் பேசப்பட்டு விட்டன, நிறைய அனுமானங்கள் உருவாகின்றன. ஆனால் யார் எந்த பக்கம் நிற்கிறோம் என்பது இனி முக்கியம் அல்ல. இந்த வழக்கு நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதே முக்கியம். உண்மை வெளிவர வேண்டும்.

ஜூன் 14 முதல் இன்று வரை பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, சுஷாந்த் சிங் வழக்கில் இன்னும் வாய்மூடி எதுவும் பேசாமல் இருப்பது நாம் கண்களை மூடிக் கொள்வதற்கு சமம். இது வரை இது குறித்து நான் எதுவும் பேசாமல் இருந்தேன். ஆனால் சூழல் தீவிரமடைந்த நிலையில் இதை நல்ல முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை. ஒரு நடிகராக, ஒரு மனிதராக அவர் ஒரு சிறந்த பணியை செய்திருப்பதாக நான் உணர்கிறேன்.

இந்த சூழலில் யாரையும் கிண்டல் செய்வது தேவையில்லாதது. ஆனால் அவரது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் யார் குற்றவாளி என்பது கண்டறியப்பட வேண்டும். கண்களை மூடியிருப்பது கோழையின் அடையாளம், கோழையாக இருப்பது நல்லதல்ல.

இவ்வாறு அனுபம் கேர் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE