தனது திருமணம் குறித்துப் போலிச் செய்தி பரவுவதாக ஜூலி காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர் ஜூலி. பின்பு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சர்ச்சையாகவும் வெடித்தது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜூலி. சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சில தினங்களுக்கு முன்பு ஜூலிக்குத் திருமணம் என்று செய்தி பரவியது. இது போலியானது என்று ஜூலி விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், தொடர்ச்சியாக தொழிலதிபருடன் ஜூலி வாழ்ந்து வருவதாகவும், திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் பரவின.
இது தொடர்பாக ஜூலி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"போலிச் செய்தியைப் பரப்பி என் பெயரைக் கெடுக்க நினைப்பவர்களைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. ஊடகங்களில் என் திருமணம் தொடர்பாக சுற்றிக் கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் போலியானது".
இவ்வாறு ஜூலி தெரிவித்துள்ளார்.