முத்தையா முரளிதரன் பயோபிக்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம்

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். உலக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இவருடைய சுழற்பந்துவீச்சு முறை மிகவும் பிரபலம். இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.

'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இதன் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் இந்தப் படத்துக்கு, 'இலங்கை வீரரின் கதையில் தமிழரான விஜய் சேதுபதி நடிப்பதா?' என்று சிலர் விமர்சித்தனர். இதனால், இந்தப் படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிப்பதில் உறுதியாகவுள்ளார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரியவுள்ளார். சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ''முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு '800' என்றே பெயரிட்டுள்ளனர்'' என்று சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.

தான் நடித்துவரும் 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு '800' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE