கொரட்டலா சிவா உடன் இணையும் அல்லு அர்ஜுன்

'புஷ்பா' படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் கொரட்டலா சிவா.

சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சாரியா' படத்தை இயக்கி வருகிறார் கொரட்டலா சிவா. இதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. ராம் சரண் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

பிரம்மாண்டமான நகரம் ஒன்றை உருவாக்கி, அதில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியுள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் சிரஞ்சீவி - ராம்சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் 21-வது படமாகும். ஆகையால் 'AA21' என்று இப்போதைக்கு அழைக்கப்பட்டு வருகிறது.

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுவிட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தயாராகவுள்ளது.

ஒரேகட்டமாக 'புஷ்பா' படத்தை முடித்துவிட்டு, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அல்லு அர்ஜுன். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளன. 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்குள், அல்லு அர்ஜுனின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE