'கர்ணன்' அப்டேட்: பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கிராமம்

By செய்திப்பிரிவு

'கர்ணன்' படத்துக்காக திருநெல்வேலிக்கு அருகிலேயே பிரம்மாண்டமாக கிராம அரங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது படக்குழு.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜய, யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதுவரை சுமார் 80% படப்பிடிப்பு முடிவுற்றது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இந்தப் படத்துக்குத் தான் முதலில் தேதிகள் ஒதுக்கி முடித்துக் கொடுக்க தனுஷ் தீர்மானித்துள்ளார். ஜூலை 29-ம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு, 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக் மற்றும் உருவான விதம் ஆகியவை வெளியிடப்பட்டன.

'கர்ணன்' உருவான விதம் வீடியோவின் மூலம், இந்தப் படத்துக்காக திருநெல்வேலிக்கு அருகே பிரம்மாண்டமாக கிராமம் ஒன்றை அரங்கமாக படக்குழு உருவாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. தனது கதைக்களத்துக்கு ஏற்றவகையில் அரங்கத்தை உருவாக்கி, சுமார் 90% படப்பிடிப்பு இதிலேயே உருவாக்க திட்டமிட்டுள்ளது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே இந்த அரங்கில் படமாக்கவுள்ளார்கள்.

தனுஷை வைத்துக் கொண்டு நிஜ இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது கடினம் என்பதால் தான், இந்தப் பிரம்மாண்டமான அரங்கம் திட்டம் என்கிறது படக்குழு. 'கர்ணன்' பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' இந்திப் படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் தனுஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE