'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் பொறுப்பிலிருந்து 'சாஹோ' இயக்குநர் சுஜீத் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூலைக் குவித்த முதல் படம் 'லூசிஃபர்' என்பது கவனிக்கத்தக்கது.
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம் சரண். அதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்குவார் என்பது உறுதியானது.
தெலுங்கிற்கு ஏற்றவாறு 'லூசிஃபர்' படத்தில் சில மாற்றங்களைச் செய்ய சொல்லியிருக்கிறார் சிரஞ்சீவி. தான் செய்துள்ள மாற்றங்கள் குறித்து சிரஞ்சீவியிடம் கூறிய போது, அது அவருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலிருந்து சுஜீத் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சுஜீத்திற்கு பதிலாக வி.வி.விநாயக், 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்கும் பொறுப்பை ஏற்று இருக்கிறார். சிரஞ்சீவிக்கு ஏற்ற வகையில் கதையில் மாற்றம் செய்யும் பணிகளை மும்முரமாகச் செய்து வருகிறார். இவர் தான் 'கத்தி' தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 150' என்ற பெயரில் சிரஞ்சீவியை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இயக்குநர் மாற்றம் தொடர்பாகவும், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர்கள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆச்சாரியா' படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து 'லூஃசிபர்' ரீமேக்கில் நடிக்க சிரஞ்சீவி தேதிகள் ஒதுக்கவுள்ளார்.