கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக வெளியாகும் வீடியோக்கள் தொடர்பாக மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று 2 லட்சத்தைக் கடந்து மொத்தம் 2,39,978 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் இன்று 1,175 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக உயிரிழப்பு 97 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தினமும் சமூக வலைதளத்தில் கரோனா பாதித்த நபர் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆம்புலன்ஸில் ஏறி மருத்துவமனைக்குச் செல்வது, வீட்டில் தனிமையில் இருக்கும்போது வாசலில் இருக்கும் பலகை எனப் பல வீடியோக்கள் இதில் அடங்கும்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நடிகை மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
» உருவாகிறது புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்?- தலைவராகும் பாரதிராஜா
» 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்துக்கு ரஜினி பாராட்டு: இயக்குநர் நெகிழ்ச்சி
"எனது அருமை நண்பர்களே, உங்கள் பக்கத்து வீட்டு நபர் அல்லது அருகில் வசிக்கும், அல்லது பணியிட நபருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்து அவரைத் தனிமைப்படுத்த ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது ஒருபோதும் அதை வீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள். அப்படி யாராவது வீடியோ, புகைப்படம் எடுத்தால் அதை உடனே தடுத்து நிறுத்துங்கள்.
மாறாக உங்கள் வீட்டு பால்கனியில் அல்லது உங்கள் வீட்டு ஜன்னலில் அல்லது கதவருகே சில அடி தள்ளி நின்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டவருக்குக் கட்டை விரலை உயர்த்தி உற்சாகம் அளியுங்கள், விரைவில் குணமடைந்து திரும்புவீர்கள் என்று வாழ்த்துங்கள்.
ஏனெனில் வைரஸ் பரவும் வேகத்தைப் பார்த்தால் உங்களுக்கான ஆம்புலன்ஸ் கூட காத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டியுள்ளது. ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் ஆம்புலன்ஸ் வந்து நிற்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தொற்று பாதிக்கப்பட்டவர் எப்படி உணர்வார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே அவரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவருக்கு நீங்கள் நல்ல ஒரு மனிதர் என்பதை உணரச் செய்யுங்கள்.
மற்றவர்களிடம் பயத்தை உருவாக்காதீர்கள், அந்த நபரைப் பற்றி அவதூறு செய்யாதீர்கள். அவருக்கு உடல் நலம் சரியல்ல அவ்வளவுதான். அவர் ஒன்றும் குற்றவாளி அல்ல. அவர் குணமடைந்து திரும்பிவிடுவார், ஆனால், நோய் வந்தபோது தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது அவரிடம் நிரந்தரமாகத் தங்கி விடும்.
இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். நாம் அன்பைப் பரப்புவோம், நம்பிக்கையை வளர்ப்போம். பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள்".
இவ்வாறு மிருணாளினி தெரிவித்துள்ளார்.