கரோனா அச்சுறுத்தல்: 'அண்ணாத்த' படப்பிடிப்பில் மாற்றம்

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலால், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

'தர்பார்' படத்தைத் தொடர்ந்து, 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சிவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்துக்காக ஹைதராபாத்தில் பெரிய அரங்குகள் எல்லாம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். சுமார் 50% படப்பிடிப்பு மட்டுமே இதுவரை முடிந்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், கரோனா அச்சுறுத்தல் முழுமையாக இல்லை என்ற நிலை வந்தவுடன்தான் படப்பிடிப்பு தொடங்குவது எனத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, 'அண்ணாத்த' படத்தின் காட்சிகளை ஹைதராபாத்தில் அரங்குகள் மற்றும் சில முக்கியக் காட்சிகளை புனேவிலும் படமாக்கத் திட்டமிட்டு இருந்தது படக்குழு. ஆனால், இனிமேல் வெளியூரில் படப்பிடிப்பு செய்ய வேண்டாம் என்றும், அனைத்துக் காட்சிகளையும் சென்னையிலே அரங்குகள் அமைத்து படமாக்குவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஹைதராபாத்தில் உள்ள அரங்குகள் அனைத்துமே பிரிக்கப்பட்டுவிட்டன. சென்னையில் உள்ள ஸ்டுடியோவிலேயே முழுமையாக அரங்குகள் அமைத்து முடிப்பது மாதிரி திட்டமிட்டு, காட்சிகளில் சில மாற்றங்களையும் செய்துள்ளனர்.

'அண்ணாத்த' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். ஆனால், இப்போது வரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் பொங்கல் வெளியீடு சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE