பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சுஷாந்தின் தந்தை, நடிகை கங்கணா, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, சுஷாந்தின் காதலி என்று அறியப்படும் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் நடிகை ரியா உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு சுஷாந்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டதாக கே.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்.
» பிரபல மராத்தி நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை
» சுஷாந்தை ரியா துன்புறுத்தினார்: முன்னாள் காதலி குற்றச்சாட்டு
இந்தப் புகாரின் அடிப்படையில் பிஹார் போலீஸார் ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கங்கணாவின் சமூக வலைதளக் குழுவின் ட்விட்டர் பக்கத்தில் ரியா பலிகடா ஆக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
'' ‘நிச்சயமாக ரியா பணத்தைச் சுரண்டுபவர்தான். ஆனால், சுஷாந்த் மட்டுமே அவரது வருமானத்துக்கான ஆதாரமாக இருந்தார். சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு அவர் ஏன் அக்தர்களை (ஃபர்ஹான் அக்தர்) சந்திக்க வேண்டும். அல்லது மாஃபியா கும்பல் அவரைப் பயன்படுத்திக் கொள்கிறதா? அந்தத் தற்கொலை கும்பல் ரியாவைப் பலிகடாவாக்கி வருகிறது''.
இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.