ரசிகர்களால் கர்வம் கொள்கிறேன்: தனுஷ் நெகிழ்ச்சி

ரசிகர்களால் கர்வம் கொள்கிறேன் என்று பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு தனுஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி இந்தி, ஹாலிவுட் திரையுலகிலும் நடித்துள்ளார்.

நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் தனுஷ். இதனை முன்னிட்டு அவருடன் நடித்தவர்கள், இயக்கியவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதனால் #HappyBirthdayDhanush, #HBDDhanush ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகின.

இன்று (ஜூலை 29) தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்து பிரபலங்களின் ட்வீட்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்து வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் தனுஷ் கூறியிருப்பதாவது:

"என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன்.

அனைத்து பிறந்த நாள் டிபிக்கள், மாஷ்-அப் வீடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுன்டவுன் டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி.

அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகின்றேன்!

மேலும், எனக்குத் தொலைபேசி வாயிலாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக வலைதளங்கள் வழியாகவும் வாழ்த்துகள் தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், நண்பர்கள் மற்றும் பண்பலை, ஊடகம், தொலைக்காட்சி அன்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE