கரோனா வைரஸ் பற்றிய ஆந்தாலஜி படமொன்றை இயக்குநர் அனுபவ் சின்ஹா தயாரிக்கவுள்ளார்.
‘ரா ஒன்’, ‘முல்க்’, ‘ஆர்டிகிள் 15’, ‘தப்பட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அனுபவ் சின்ஹா. இதில் ‘ரா ஒன்’ தவிர மற்ற அனைத்துத் திரைப்படங்களும் முக்கிய சமூகப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசியவை. கடைசியாக வெளிவந்த ‘தப்பட்’ திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை தொடங்கி சுஷாந்த் தற்கொலை விவகாரம் வரை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அனுபவ் சின்ஹா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த செவ்வாய் (21.07.20) அன்று தான் பாலிவுட்டை விட்டு விலகப்போவதாகவும் இனி சுயாதீனமாக திரைப்படங்களை இயக்கப்போவதகாவும் ட்விட்டர் பக்கத்தில் அனுபவ் சின்ஹா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்த திரைப்படமொன்றை, தான் தயாரிக்கப் போவதாக அனுபவ் சின்ஹா அறிவித்துள்ளார்.
ஆந்தாலஜி (Anthology) வகையைச் சேர்ந்த இப்படத்தை ஹன்ஸல் மேத்தா, சுதிர் மிஷ்ரா, சுபாஷ் கபூர், கேடன் மேத்தா ஆகியோர் இயக்கவுள்ளனர். வெவ்வேறு களங்களைக் கொண்ட நான்கு கதைகளும் கரோனா வைரஸ், ஊரடங்கு கால வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசவுள்ளதாக அனுபவ் சின்ஹா கூறியுள்ளார்.