திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயமாக இருக்கிறது: பூர்ணா

By செய்திப்பிரிவு

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயமாக இருக்கிறது என்று நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் அன்வர் அலி என்ற பெயர் கொண்ட ஒருவர் பூர்ணாவுக்கு செல்போனில் அறிமுகமாகியுள்ளார். துபாயில் நகைக்கடை முதலாளி என்று அவர் உரையாடியுள்ளார். பின்னர், அன்வரின் குடும்ப உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடமும் அன்வரின் புகைப்படம் என்று டிக் டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர். இதில் சந்தேகமடைந்த பூர்ணாவின் குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பூர்ணாவின் கார், வீடு ஆகியவற்றை அவர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பூர்ணாவின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கவே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் கேரளாவில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு முதன் முறையாக பேட்டியளித்துள்ளார் பூர்ணா.

அந்தப் பேட்டியில் பூர்ணா கூறியிருப்பதாவது:

"எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அப்போது அறிமுகமானது தான் இந்த மோசடி கும்பல். இரு குடும்பத்தினர் சம்மதம் கிடைத்த நிலையில், நான் திருமணம் செய்ய இருந்தவரிடம் எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசினேன். பின்பு நடந்த விஷயங்களால் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது.

அந்த போலி குடும்பத்தினர் பேசிய அன்பான பேச்சுகளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த உலகத்தில் யாரை நம்புவதென்றே தெரியாமல் தவிக்கிறேன். ஆகையால், இப்போதைக்கு திருமணம் குறித்துப் பேசாதீர்கள் என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. இந்தச் சம்பவத்திலிருந்து என்னை மீட்க குடும்பத்தினர் போராடி வருகிறார்கள். அனைத்தையும் மறக்க நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்"

இவ்வாறு பூர்ணா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE