அக்டோபரிலிருந்து மதுரையில் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

அக்டோபரிலிருந்து மதுரையில் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'ராஞ்சனா'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் மூலமே, இந்தித் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். அதற்குப் பிறகு 'ஷமிதாப்' படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.

தற்போது மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடிக்கவுள்ளார். அக்‌ஷய் குமார் - சாரா அலிகான் காட்சிகளை பிஹாரிலும், தனுஷ் - சாரா அலிகான் காட்சிகளை மதுரையிலும் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டது.

இதில் முதலில் தனுஷ் - சாரா அலிகான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குள் கரோனா அச்சுறுத்தல் தொடங்கவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நாளை (ஜூலை 28) தனுஷின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, அக்டோபரிலிருந்து , 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு மதுரையில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம், 'அத்ரங்கி ரே' படத்துக்கு முன்பாக 'கர்ணன்' பணிகளை முடித்துக் கொடுக்க தனுஷ் திட்டமிட்டு இருப்பது தெளிவாகிறது.

'அத்ரங்கி ரே' படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE