இணையத் துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.
‘ப்ரண்ட்ஸ்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மீசைய முறுக்கு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார். நேற்று (ஜூலை 26) அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்ற அவர், தற்போது, அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ பதிவில் சீமானையும், சீமான் கட்சியினரையும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சீமான் மற்றும் ஹரி நாடாரைக் கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விஜயலட்சுமிக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.
» இந்தியில் யாரும் வாய்ப்பு தராததால் விரக்தி நிலைக்குச் சென்றேன்: ரசூல் பூக்குட்டி
» நான் எடுக்காத ஒரு காட்சி கூட புதிய 'ஜஸ்டிஸ் லீக்' படத்தில் இடம்பெறாது: ஸாக் ஸ்னைடர் ஆவேசம்
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"விஜயலட்சுமி இப்போது நலமாக இருக்கிறார். சமூக ஊடகத்தில் அவருக்கு வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் வசவுகளால் அவர் மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தாண்டி வந்திருக்கிறார். போராடும் தனி ஒரு பெண்ணாக அவர் நிறைய பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளார். இணையத் துன்புறுத்தலை நிறுத்துங்கள். தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்திருக்கும் துரோகமே இதற்கு மிகப்பெரிய முக்கியக் காரணம். உலகம் அவரை சரியாக நடத்தவில்லை. அதுதான் அவரை இப்படி ஒரு முடிவுக்குத் தள்ளியுள்ளது. நடிகர் சங்கம் அவருக்கு உதவி வருகிறது.
பேட்டிகளுக்காக யாரும் என்னை அழைக்க வேண்டாம். நீங்கள் விவாதிக்க ஒரு பொருளைக் கொடுத்து, அதை அரசியல் ஆக்குவதற்காக நான் இங்கு உட்கார்ந்திருக்கவில்லை. டிஆர்பிக்காக ஒருவரின் வாழ்க்கையை வைத்து, தங்களின் வியாபாரத்தில் சம்பாதிப்பதற்காக, தத்தளிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவாமல் அதைப் பதிவு செய்யும் ஊடகங்களை நான் வெறுக்கிறேன். அந்தக் குடும்பத்தைத் தனியாக விடுங்கள், விட்டுவிடுங்கள். அந்தக் குடும்பத்திற்கு உதவுவதற்காக நாங்கள் முயன்று வருகிறோம். யாராவது உதவ முடியும் என்றால் தயவுசெய்து எங்களுடன் சேருங்கள்".
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.