சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வாரிசு நடிகர்களின் பக்கத்திற்கே சென்று நெட்டிசன்கள் பலர் அவர்களைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் பல நடிகர்கள் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள், சஞ்சய் லீலா பன்ஸாலி, ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிவுட்டின் வாரிசு நடிகர்கள் கொடுத்த அழுத்தத்தினாலேயே சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அந்தக் கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, சுப்பிரமணியன் சுவாமிக்குப் பதிலளித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதத்துக்கு நரேந்திர மோடி அனுப்பிய பதில் கடிதத்தில், ''ஜூலை 15 அன்று நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கப்பெற்றது'' என்று பிரதமர் குறிப்பிட்டு கையொப்பமிட்டுள்ளார்.
இதனை சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.