தெலுங்கு நடிகர் நிதின் - ஷாலினி திருமணம் நேற்று (ஜூலை 26) நடைபெற்றது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதினின் திருமணம் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக துபாயில் திருமணம் ஏற்பாடுகள் வெகு விமரிசையாகத் திட்டமிடப்பட்டன.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துத் திட்டங்களும் கைவிடப்பட்டன. மேலும், தனது திருமணத்தையும் ஒத்திவைத்தார் நிதின். கரோனா அச்சுறுத்தல் முடிந்து நிலைமை எப்போது சுமுகமாகும் என்பது இப்போது வரை தெரியவில்லை.
இந்நிலையில், கடந்த 22-ம் தேதி அன்று நிதின் -ஷாலினி நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிதின் - ஷாலினி திருமணம் நேற்று (ஜூலை 26) இரவு 8:30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்காக தெலுங்குத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அனைவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நிதின் - ஷாலினிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.