நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யா தேவிக்கு கரோனா: கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி

நடிகை வனிதாவின் புகாரில் கைதான சூர்யா தேவி மற்றும் அவரை கைது செய்த பெண் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நடிகை வனிதா கடந்த ஜூன் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன. வனிதாவின் திருமணத்தை சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தை சேர்ந்த சூர்யா தேவி (27) என்ற பெண் விமர்சித்து தனது ‘யு-டியூப்' சேனலில் வெளியிட்டார்.

இதையடுத்து போரூர் காவல் நிலையத்தில், சூர்யா தேவி மீது வனிதா புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16-ம்தேதி வனிதா மீது புகார் அளித்தார். இந்நிலையில், போலீஸார் கடந்த 23-ம் தேதி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கைது நடவடிக்கையின் விதிமுறைப்படி சூர்யா தேவிக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், வடபழனி மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். தற்போது சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில், சூர்யா தேவி மற்றும் பெண் ஆய்வாளர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா தேவியின் வீட்டுக்கு சுகாதாரத் துறை ஊழியர்கள் சென்றபோது, அவர் அங்கு இல்லை. கரோனா உறுதியானதால், அவர் அங்கிருந்து தலைமறைவாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். சூர்யா தேவி கைது செய்யப்படும் போது காவல் நிலையத்தில் உடன் இருந்த, நடிகை வனிதா மற்றும் காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் தலைமறைவாகவில்லை என்றும், தனக்கு கரோனா தொற்று இல்லை என்றும் அப்படி இருந்தால், தான் குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சூர்யா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE