'தில் பெச்சாரா' படம் தொடர்பாக முன்னணி நடிகர் நவாசுதின் சித்திக் விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்களுக்கு இடையே கருத்து பகிர்வு இப்போது வரை நடைபெற்று வருகிறது.
சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான கடைசி படமான 'தில் பெச்சாரா' திரைப்படம் ஜூலை 24-ம் தேதி இரவு 7:30 மணியளவில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதுவும் முழுக்க இலவசமாகப் பார்க்கும் முறையில் வெளியிடப்பட்டது.
பல்வேறு பிரபலங்கள், விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்கள். சில விமர்சகர்கள் இந்தப் படம் நன்றாக இல்லை எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான நவாசுதின் சித்திக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"’தில் பெச்சாரா" படத்துக்கு விதிவிலக்கு வழங்குமாறு மதிப்புக்குரிய அனைத்து திரை விமர்சகர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இப்படத்தை சுஷாந்த்துக்கு ஒரு அர்ப்பணிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒன்றாகக் கொண்டாடுவோம்"
இவ்வாறு நவாசுதின் சித்திக் தெரிவித்துள்ளார்.