பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஓவியா சர்ச்சை கருத்து

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓவியா, அந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.

இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதனால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். தமிழில் 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' தொடங்கப்பட்டது. கமல் தொகுத்து வழங்கினார்.

'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதில் சிநேகன், ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சுஜா வரூணி, வையாபுரி, காஜல் பசுபதி, ரைஷா வில்சன், காயத்ரி ரகுராம், சக்தி, ஜூலி, ஓவியா, நமீதா, ஹார்தி, கஞ்சா கருப்பு, பரணி மற்றும் அனுயா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் பக்கங்கள் எல்லாம் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்குச் சென்றாலும் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், அவரோ அந்த பிரபலத்தைத் திரையுலகில் பெரிதாக உபயோகிக்கவில்லை.

இதனிடையே, எப்போதாவது தான் தனது சமூக வலைதள பக்கத்துக்கு வருவார் ஓவியா. சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நேற்றிரவு (ஜூலை 26) திடீரென்று "பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா.

இந்த ட்வீட் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அப்போது அந்தப் பதிவுக்கு "ஆம். தடை செய்ய வேண்டும்" என்று பதிலளித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா "அவர்கள் போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE