கார்த்தி நடிப்பில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற பருத்திவீரன் படத்தில் நடித்த நாட்டுப்புறப் பாடகி காரியாபட்டி லட்சுமியம்மாளின் வறுமையை அறிந்து நடிகர் கார்த்தி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
அந்தப் படத்தில் லட்சுமியம்மாள் ஊரோரம் புளியமரம் பாடலிலும், டங்கா டுங்கா தவிட்டுக்காரி பாடலில் பாடி நடித்திருப்பார்.
முன்னதாக இந்து தமிழ் இணையதளத்தில், பருத்தி வீரன் புகழ் நாட்டுப்புற பாடகி காரியாப்பட்டி லட்சுமியம்மாள், ஒழுகும் ஆஸ்பெஸ்டாஷ் ஷீட் வீட்டில் பெற்ற விருதுகளைக் கூட வைக்க இடமில்லாமல் அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வறுமையில் வாடுவதாக செய்தி வெளியானது.
(செய்தியைப் படிக்க: வறுமையுடன் போராடும் பருத்திவீரன் புகழ் நாட்டுப்புறப் பாடகி காரியாபட்டி லட்சுமியம்மா: ஒய்வூதியம் வழங்க அரசு கருணைக் கரம் நீட்டுமா? )
இந்த செய்தியைப் பார்த்த நடிகர் கார்த்தி ஒரு சில நிமிடங்களிலேயே லெட்சுமியம்மாளைத் தொடர்பு கொண்டு ரசிகர் மன்றம் வாயிலாக உதவுதாகக் கூறியுள்ளார்.
கார்த்தி தொலைபேசியில் பேசிய சில மணிகளிலேயே லட்சுமியம்மாளின் வீட்டிற்குச் சென்ற கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவருக்கு ரூ.10,000 ரொக்கப்பணம் கொடுத்து உதவியுள்ளனர்.
மேலும், அவருடைய மருத்துவச் செலவுக்கு மாதந்தோறும் தொடர்ந்து உதவுவதாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து லட்சுமியம்மாள் நமது நிருபரிடம் பேசுகையில், "இந்து தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியைப் பார்த்து நடிகர் காத்தி உடனே என்னிடமும் எனது மகன்களிடமும் பேசினார். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர், எனக்கு உடனே ரூ.10,000 கொடுத்தனுப்பினார். கவலைப்பட வேண்டாம் என நம்பிக்கை கொடுத்துள்ளார். இவ்வளவு சீக்கிரம் எனக்கு உதவி செய்தி நடிகர் கார்த்திக்கு மனமார்ந்த நன்றி. அதை எடுத்துச் சென்ற இந்து தமிழுக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.