விஜய் சேதுபதிக்கு நாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் தவறானது எனத் தெரிய வந்துள்ளது.
தமிழில் 'கடைசி விவசாயி', 'மாஸ்டர்', 'மாமனிதன்', 'லாபம்', 'க/பெ ரணசிங்கம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்' மற்றும் தெலுங்கில் 'உபெனா', இந்தியில் ஆமிர்கானுடன் ஒரு படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. கரோனா ஊரடங்கில் இறுதிகட்டப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், தன் படங்களின் டப்பிங் பணிகளை முடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2 நாட்களாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. இதில் அனுஷ்கா நாயகியாக நடிக்கவிருப்பதாகவும், வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். விஜய் சேதுபதி - அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்ததில்லை என்பதால், இந்தச் செய்தி வைரலாக பரவியது.
இது தொடர்பாக வேல்ஸ் நிறுவனம் தரப்பில் விசாரித்த போது, "இந்தக் கூட்டணி செய்தியில் உண்மையில்லை. எங்கள் நிறுவனத்துக்கு அனுஷ்கா ஒரு படம் பண்ணவுள்ளார். அதை கெளதம் மேனன் இயக்கவுள்ளார்" என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் விஜய் சேதுபதி படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி தவறானது என்று தெரிய வந்துள்ளது.