சாலையில் சிலம்பம் சுற்றி உதவி கேட்ட மூதாட்டியுடன் இணைந்து தற்காப்புக் கலை பயிற்சி பள்ளி- சோனு சூட் விருப்பம்

By செய்திப்பிரிவு

மூதாட்டி ஒருவர் சாலையில் சிலம்பம் சுற்றி உதவி கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வந்தது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து அந்த மூதாட்டிக்கு உதவுவதாக தெரிவித்திருந்தனர்.

அந்த வீடியோவில் சாலையின் ஓரத்தில் நின்ற அந்த மூதாட்டி கையில் இரண்டு சிலம்பங்களை வைத்துக் கொண்டு அபாரமான முறையில் அவற்றை சுழற்றினார். அதை சாலையின் மறுபக்கத்தில் இருந்த யாரோ ஒருவர் ட்விட்டரில் பதிவிட உடனடியாக காட்டுத் தீ போல அந்த வீடியோ நாடு முழுவதும் வைரலானது.

இந்நிலையில் நடிகர்கள் சோனு சூட் மற்றும் ரிதேஷ் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இது குறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அவரை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைக்குமா? அவரோடு சேர்ந்து ஒரு சிறிய பயிற்சி பள்ளி தொடங்கி நம் நாட்டு பெண்களுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

அதே போல நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் அந்த மூதாட்டியை பற்றிய தகவல்களை ட்விட்டர் மூலம் கேட்டறிந்து அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த மூதாட்டியின் பெயர் ஷாந்தா பவார் என்பதும் அவர் புனேவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE