'யான்' படத்தை இயக்கிய காலகட்டம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்று ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'யான்'. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தன், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பணிபுரிந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம், பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமன்றி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பிறகு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் ரவி.கே.சந்திரன் இடையே மோதல் ஏற்பட்டது.
தற்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். அந்தப் பேட்டியில், " 'யான்' என்ற தமிழ்ப் படத்தின் மூலம் இயக்குநர் ஆனீர்கள். ஆனால், அதற்குப் பிறகு எந்தப் படமும் இயக்கவில்லை. இயக்குநராக இருந்தபோது எந்த மாதிரியான வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்" என்ற கேள்விக்கு ரவி.கே.சந்திரன் கூறியிருப்பதாவது:
» குறிப்பிட்ட தேதியில் அவதார் இரண்டாம் பாகத்தை வெளியிடுவது சாத்தியமில்லை: ஜேம்ஸ் கேமரூன்
» இங்கே சக நடிகர்களிடமிருந்துகூட பாராட்டு கிடைப்பதில்லை: வித்யூத் ஜம்வால் ஆதங்கம்
" 'யான்' ஒரு கலவையான அனுபவம். அந்தப் படம் வெளியாக இரண்டரை ஆண்டுகள் ஆயின. ஆனால், அந்தக் காலகட்டம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. என்னுடைய அடுத்த படத்துக்குப் பிறகே நான் இயக்கம் குறித்துப் பேச இயலும் என்று எண்ணுகிறேன். அது ஒரு வித்தியாசமான அனுபவம். அதைத் திட்டமிட்டுச் செயல்படுத்த நேரம் தேவை".
இவ்வாறு ரவி.கே.சந்திரன் தெரிவித்துள்ளார்.