முதலில் சூரி, பின்பு சூர்யா, அடுத்து தனுஷ்: இயக்குநர் வெற்றிமாறன் திட்டம்

By மகராசன் மோகன்

முதலில் சூரி படம், அடுத்து 'வாடிவாசல்' ஆகிய படங்களை முடித்துவிட்டுத்தான் தனுஷ் படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

'அசுரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெற்றிமாறன். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க முன்வந்தார். இந்தப் படத்தின் பணிகளுக்கு இடையே, மீண்டும் தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யாவை இயக்கவும் கையெழுத்திட்டார் வெற்றிமாறன்.

சூரி நடிக்கும் படத்தை வெளிநாட்டில் படமாக்குவதற்கான இடங்கள், தேர்வுப் பணிகள் நடைபெற்றன. அந்தச் சமயத்தில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கவே காட்சிகள் மாறின. தமிழ்நாட்டுக்குள்ளேயே படமாக்குவதுபோல் சூரிக்காக ஒரு கதையைத் தயார் செய்து வந்தார் வெற்றிமாறன்.

இதனிடையே நேற்று (ஜூலை 23) மாலை முதல், வெற்றிமாறன் - தனுஷ் மீண்டும் இணைகிறார்கள் என்றும், வெளிநாட்டுப் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் சூரி படம் நடக்கும் என்றும் தகவல் வெளியானது. இது பலரும் ஆச்சரியத்தை அளித்தது.

இது தொடர்பாக விசாரித்தபோது, "முதலில் சூரி படத்தை முடிக்கவுள்ளார் வெற்றிமாறன். இதற்காகத் தன் குழுவினருடன் தமிழ்நாட்டுக்குள்ளே படமாக்குவதுபோல் ஒரு கதையைத் தயார் செய்துவிட்டார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இதன் பணிகள் தொடங்கும். சின்ன படம் என்பதால் சீக்கிரமாக முடிக்கலாம் என்று வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

சூரி படத்தை முடித்தவுடன், 'வாடிவாசல்' படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். அது பெரிய பட்ஜெட், பெரிய உழைப்பு தேவைப்படும் படம் என்பதால் இதன் பணிகள் இப்போதே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்காகக் காளைகளைத் தேர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டது.

'வாடிவாசல்' படத்தை முடித்துவிட்டுத்தான், மீண்டும் தனுஷை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படம் 'வடசென்னை 2' ஆக இருக்குமா என்பதெல்லாம் இன்னும் எதுவுமே முடிவாகவில்லை. சூரி படம் மற்றும் 'வாடிவாசல்' பணிகளை முடித்துவிட்டுத்தான், தனுஷுக்கு எந்த மாதிரி கதை பண்ணலாம் என்பதிலேயே கவனம் செலுத்தவுள்ளார் வெற்றிமாறன்" என்று தெரிவித்தார்கள்.

இதன் மூலம் சூரி படம், 'வாடிவாசல்' ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணையவுள்ளது உறுதியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE