சுஷாந்த் குடும்பத்தினரிடம் நாம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்: ஸ்வாரா பாஸ்கர் வெளிப்படை

By செய்திப்பிரிவு

சுஷாந்த் குடும்பத்தினரிடம் நாம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்று நடிகை ஸ்வாரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கங்கணா ரணாவத் அளித்த பேட்டியில்கூட மகேஷ் பட், கரண் ஜோஹர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டினார். மேலும், டாப்ஸி மற்றும் ஸ்வாரா பாஸ்கர் ஆகியோரையும் சாடினார். இதற்கு டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்து வருகிறார்.

இதனிடையே, தொடர்ச்சியாக ஒவ்வொரு செய்தியிலும் சுஷாந்த் சிங் மரணம் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நடிகை ஸ்வாரா பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒரு சுய பரிசோதனைக்கான தருணம் ஏற்பட்டது. நம்முடைய விவாதங்களில் எண்ணற்ற முறை சுஷாந்த் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் சுஷாந்த் குடும்பத்தினரிடம் நாம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது நம்மைப் பற்றியானது அல்ல. சுஷாந்த் படம் ஒன்று ரிலீஸ் ஆகவுள்ளது. நாம் இழந்த ஒரு பிரகாசமான வாழ்வின் ஞாபகத்தைக் கொண்டாடுவோம். அன்போடு இருப்போம்".

இவ்வாறு ஸ்வாரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE