’பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? - தருண் விளக்கம்

By செய்திப்பிரிவு

'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திக்கு தருண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகவே தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தமிழில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமலும், தெலுங்கில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர், நானி மற்றும் நாகார்ஜூனா ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் இந்த ஆண்டு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறாமல் இருந்தது. தற்போது தெலுங்கில் 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோவை ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. இதனால் இந்த முறை யார் தொகுத்து வழங்கவுள்ளார், யாரெல்லாம் போட்டியாளர்கள் என்று பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இதில் 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியின் போட்டியாளராக நடிகர் தருண் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக தருண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சிறு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இந்தக் கடினமான காலகட்டத்தில் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களிலும் சில பத்திரிகைகளும் வந்து கொண்டிருக்கும் செய்திகள் தவறானவை என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதில் நான் கலந்துகொள்ளவும் இல்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். அந்தச் செய்திகள் அனைத்தும் வதந்திகளே. போலிச் செய்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம். உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி".

இவ்வாறு தருண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE