'அஞ்சான்' படம் நல்லதொரு பாடம் என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அஞ்சான்'. 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யுடிவி நிறுவனம் இணைந்து தயாரித்தது. யுவன் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட படம் என்பதால், இந்தத் தோல்வியைப் பலருமே கிண்டல் செய்தார்கள்.
இந்தப் படத்தின் இந்தி டப்பிங் 'கடார்நாக் கில்லாடி 2' என்ற பெயரில் யூடியூப் வெளியிடப்பட்டது. இந்த டப்பிங் எதிர்பார்த்ததை விட வரவேற்பைப் பெற்று 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த வரவேற்பு தொடர்பாக 'அஞ்சான்' வெளியான சமயத்தில் யுடிவி நிறுவனத்தில் பணிபுரிந்த தனஞ்ஜெயன் கூறியிருப்பதாவது:
"லிங்குசாமி சார் இயக்கத்தில் சூர்யா சார் நடித்த 'அஞ்சான்' படத்தை பலரும் மோசமாக விமர்சித்தார்கள். ஆனால், அந்தப் படத்தின் இந்தி டப்பிங் ஆன 'கடார்நாக் கில்லாடி 2' யூடியூப் தளத்தில் 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒவ்வொரு திரையுலகமும் வித்தியாசமான முறையில் இயங்குகிறது. ஆனால், நல்லதொரு பாடம்"
இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.