பிளாஸ்டிக் கவரால் வீட்டை மூடிய ஷாரூக்கான்: கரோனா பயமா? உண்மைக் காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

நடிகர் ஷாரூக்கான் மும்பையில் தனது பிரம்மாண்ட வீட்டை பிளாஸ்டிக் கவரால் மூடியதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் மாநிலங்களில் மகாராஷ்டிரா இன்னும் முதலிடத்தில் உள்ளது. மும்பையில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஷாரூக்கான், மும்பையில் இருக்கும் தனது பிரம்மாண்டமான இல்லத்தை, பிளாஸ்டிக் கவர் போட்டு மூடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

மும்பையில் கரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவு பரவி வருவதால்தான் அவர் இதைச் செய்திருக்கிறார் என்று உடனடியாக பல கருத்துகள் பகிரப்பட்டன. மேலும், காற்று வழியாக கரோனா பரவுவதற்கான சான்று கிடைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே ஷாரூக் இதைச் செய்திருக்கிறார் என்றும் சில ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர்.

ஆனால் உண்மையில், ஒவ்வொரு வருடமும் ஷாரூக்கான் இப்படிச் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு மும்பையில் பெய்யும் அதீதமான பருவமழையே காரணம். பலத்த காற்று, மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே ஷாரூக்கான் தனது வீட்டின் வெளிப்புறங்களை பிளாஸ்டிக் ஷீட் வைத்து மறைத்திருக்கிறார் என்பதே உண்மை எனத் தெரியவந்துள்ளது. இது தெரியாமல் பல ஊடகங்களில் கரோனாவுக்குப் பயந்தே ஷாரூக் இதைச் செய்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஷாரூக் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த, மும்பை மாநகராட்சிக்கு ஷாரூக்கான் தனது அலுவலக இடத்தை மொத்தமாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE